இலங்கை அரச பயங்கரவாதிகளின் கையிலா எம் மக்கள் சாக வேண்டும்? இதை மாற்ற புலம்பெயர் தமிழர்களால் முடியாதா??
- இவ் விடயம் 12. 06. 2009, (வெள்ளி), தமிழீழ நேரம் 3:46க்கு பதிவு செய்யப்பட்டது
- செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி
வன்னியில் அண்மைக் காலத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய முகாம்களுக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உட்பட உள்ளுர் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் செல்வதற்கு படைத்தரப்பு தொடர்ந்தும் அனுமதி மறுத்தே வருகின்றது.
இதனால் இந்த முகாம்களில் உள்ள சுமார் 1லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொடர்பில், எதுவுமே தெரியாத ஒரு நிலையே நீடிப்பதாக வன்னியிலுள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
இரகசியத் தன்மை பேணப்பட வேண்டும் என்ற பெயரில் இந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் பாரிய உணவின்மை மற்றும் அடிப்படை வசதியின்மை காரணமாக பெரும் நோய்த் தொற்றல்களையும் கடுமையான பின்னடைவுகளையும் சந்தித்திருப்பதாக அங்குள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள் கூறுகின்றன.
இந்த முகாம்களில் உள்வர்களுக்கான உதவிகளை வழங்க பல்வேறு தரப்புகளும் ஆர்வம் காட்டுகின்ற போதிலும் பாதுகாப்பு அமைச்சு அதற்கான அனுமதியை தொடர்ந்தும் மறுத்தே வருகின்றது.
இதனிடையே அனுமதி வழங்கப்பட்ட ஏனைய முகாம்களில் கூட இலங்கை அரசின் உத்தியோக பூர்வ அமைப்பான மனித உரிமைகள் அமைப்பு தாங்கள் எதனையுமே செய்ய முடியாத ஓர் இக்கட்டான நிலையிலேயே வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
ஒப்புக்கு குறித்த முகாம்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் கீழ் செல்லும் தாங்கள் மலசல கூட வசதி குடிநீர் வசதி போன்ற வெளிப்படைக்குத் தேவையான பிரச்சினைகள் குறித்து மட்டுமே கதைக்கக் கூடியதாக உள்ளதாகவும் அங்குள்ள மக்களின் நிலைகள் தொடர்பாகவோ அல்லது ஏனைய விடயங்கள் தொடர்பாகவோ தாங்கள் வாய் திறப்பதற்கு எந்தவொரு அனுமதியும் இல்லை எனவும் கொழும்புத் தலைமையகத்திற்கு தம்மால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்கள் தொடர்பில் எந்தவொரு ஆக்கபூர்வமான அறிவிப்போ பதிலோ கிட்டாத நிலையே காணப்படுவதாகவும் மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா அதிகாரிகள் தரப்பில் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே புதிதாக திறக்கப்பட்ட இந்த முகாம்கள் பலவற்றில் ஏனோதானோ என்ற வகையில் தான் உணவு விநியோகம், குடிநீர் விநியோகம் கூட இடம்பெறுவதால் அங்குள்ளவர்கள் மிக மோசமான நெருக்குவாரங்களை சந்தித்து வருவதாகவும் அடுத்து வரும் காலங்களில் இது மிகவும் மோசமான பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த முகாம்களில் விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களையே தடுத்து வைத்திருப்பதாக அரசு கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அங்கு கடமையாற்ற வந்த சிங்கள பெரும்பான்மையின அரச சார்பற்ற அமைப்பொன்றின் பிரமுகர் ஒருவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இந்த முகாம்களில் நிலவுகின்ற அவலங்கள் நாங்கள் இலங்கையர்கள் என்று பெருமைப்படுவதில் ஏதுமற்றதோர் நிலையே காணப்படுவதாக மிகவும் ஆழ்ந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.