Tuesday, June 16, 2009

தமிழீழ அடிப்படைத் தகவல்

அடிப்படைத் தகவல்

வகை:
விவரம்:
உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும். தேசியக்கொடியை ஏற்றிப் போற்றியபின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கப்படுகின்றன.

மாற்றாரின் பிடியிலிருந்து தமிழீழ மண்ணை முற்றாக விடு விப்பதற்கான போராட்டம் வீறுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆயிரக்கணக்கான மாவீரரின் உயிர்களை விலை கொடுத்து மாற்றாரிடமிருந்து மீட்டெடுத்த எமது பாரம் பரியத் தமிழீழ மண்ணில் தமிழீழ நாட்டுக்கான தேசியக்கொடியை எமது தேசியத்தலைவர் ஏற்றிப்பறக்கவிட்டுள்ளார்.

நாடு உருவாகுதற்கு முன்பே நாட்டுமக்களால் முறைப்படி கொடிவணக்கம் செலுத்தி, கொடிவணக்கப்பாடலை இசைத்து முதன்மை விழாக்களை, நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் தமிழீழமண் தேசியக்கொடி வரலாற்றில் ஒரு புதுமை சேர்த்திருக்கிறது.

உலகம் வியக்கக்கூடிய புதுமையான வரலாற்றைப் பெற்ற எமது தேசியக்கொடியை ஏற்றிப்போற்றும் முறையைத் தமிழீழ மக்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்

தேசியக்கொடியின் தன்மை

-----------------------------------------
ஒரு நாட்டின் தேசிய இனங்கள், நாட்டு மக்களின் பண்புகள், ஆட்சி, இறைமை என்பவை உட்பட அந்த நாட்டைக் குறிக்கின்ற ஒட்டுமொத்தமான பொதுச் சின்னமாகத் தேசியக்கொடி விளங்குகின்றது.

தேசியக்கொடியின் அமைப்பும் அளவும்

-------------------------------------------------------------
ஒவ்வொரு நாட்டினதும் இயல்புகள், நிலைமைகள், எண்ணங்கள் ஆகியவற்றின் வெளிப்பாடாக அந்தந்த நாடுகளின் தேசியக்கொடிகளின் சின்னம், நிறம், அளவு, அமைப்பு என்பன வேறுபட்டிருக்கும். தேசியக்கொடிகளின் நீள, அகலங்கள் பெரும்பாலும் 3:2 என்ற கூறுபாடு (விகிதம்) கொண்டனவாக அமைகின்றன. சில நாடுகளின் தேசியக்கொடிகளின் நீள, அகலங்கள் 2:1 என்ற அளவினவாகவும் இன்னும் சில நாடுகளில் 1:1 என்ற அளவைக் கொண்டனவாகவும் (சதுரமாகவும்) அமைகின்றன

தேசியக்கொடியின் பெருமையும் கொடி வணக்கமும்

------------------------------------------------------------------------------------
நாட்டைப்போற்றி வணங்குதற்கீடாகத் தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தப்படுகின்றது. தேசியக்கொடியை வணங்குவது, நாட்டை வணங்குவது போலாகும். நாட்டின் தலைவர், படை, ஆட்சி என்பவற்றைவிடவும் உயர்ந்ததாகத் தேசியக்கொடி மதிக்கப்படுகின்றது. எனவேதான் எந்தவொரு நாட்டிலும் எந்தச் சிறப்பு நிகழ்வுகளின்போதும் நாட்டின் தலைவர், படை வீரர், அரசுப் பணியாளர், குடிமக்கள் அனைவரும் கொடிவணக்கம் செய்கின்றனர்.

நாட்டின் எல்லைப்புறப் பகுதிகளிலும் குறிப்பிட்ட சில பொது இடங்களிலும் தேசியக்கொடியை நாள்தோறும் பறக்கவிடலாம்.

வெளிநாடுகளிலுள்ள எமது பணியகங்களிலும் தூதரகங்களிலும் பகலில் எந்நாளும் எமது தேசியக்கொடியைப் பறக்கவிடலாம்.

தேசியக்கொடி ஏற்றப்படும்போது அனைவரும் எழுந்துநின்று வணக்கம் செலுத்துதல் வேண்டும்.

கொடிவணக்கத்தின்போது சீருடையில் இருக்கும் பணி ஆளணியினர் (படையணிகள், சாரண இயக்கத்தவர், முதலுதவிப்படை முதலியன) தத்தமது பணிகளுக்குரிய கட்டளைகளில் விதித்துரைக்கப்பட்டவாறு முறைப்படி கொடிவணக்கம் செலுத்துவர்.

சீருடை அணிந்தவர்கள் தவிர ஏனையோர் தலையணி (தொப்பி) அணிந்திருப்பின் தேசியக்கொடி ஏற்றப்படும் வேளையில் அவற்றை வலது கையாற் களைதல்வேண்டும். தலையணியைக் களைந்தபின்பு வலது கையை இடப்பக்க நெஞ்சின் மீது வைத்துக் கொடி வணக்கம் செலுத்தவேண்டும். தமிழீழக் குடியுரிமையாளரல்லாதாரும் வலது கையை இடப்பக்க நெஞ்சின் மீது வைத்து வணக்கம் செலுத்தலாம். அல்லது கவன நிலையில் (Attention) நிற்கவேண்டும்.

வணக்கத்துக்குரிய தேசியக்கொடியை உடையாக அணியவோ உடையின் பகுதியாகப் பொருத்தவோ கூடாது.

தேசியக்கொடியிற் பொறிக்கப்பட்டுள்ள இலச்சினையைப் பெறுமதியான பொருட்களிலோ உடைகளிலோ பொறிக்கலாம்.

தேசியக்கொடியில் எவ்வகையான அடையாளங்களையோ எழுத்துக்களையோ சொற்களையோ எண்களையோ வடிவங்களையோ படங்களையோ எழுதவோ வரையவோ கூடாது.

தற்காலிகமாகப் பயன்படுத்திவிட்டு வீசப்படும் எப்பொருளிலும் தேசியக்கொடியைப் பதிக்கக்கூடாது.

தேசியக்கொடி நிலத்தில் வீழ்வதை எப்பாடுபட்டேனும் தவிர்க்கவேண்டும். ஒருவேளை நிலத்தில் வீழ்ந்துவிட்டால் உடனடியாக நிலைமையைச் சீராக்கிவிடவேண்டும். கொடியில் அழுக்குப்படிந்துவிட்டால் உடனடியாகக் கழுவிக் காய விட்டபின்பே பயன்படுத்தவேண்டும்.

தேசியத்துயர நிகழ்வின்போது தேசியக்கொடியை அரைக்கம்பத்திற் பறக்கவிடப்படுவதன்மூலம் நாட்டின் துயரம் உணர்த்தப்படுகின்றது. கொடிக்கம்பத்தின் நுனியிலே பறக்கின்ற கொடி நடுப்பகுதிவரை இறக்கப்பட்டு அரைக்கம்பத்திற் பறப்பதே நாட்டின் மிகுதுயரை உணர்த்துவதாயின் தேசியக்கொடி சிதைவுறுவதோ கீழே வீழ்த்தப்படுவதோ வீசப்படுவதோ கால்களில் மிதிக்கப்படுவதோ எண்ணிக்கூடப் பார்க்கமுடியாத இழி நிலையாகும்.

தேசியக்கொடியின் நிறம் மங்கிப்போனாலோ வேறு ஏதாவது வகையிற் பழுதடைந்து பறக்கவிடுவதற்குரிய நிலையை இழந்துவிட்டாலோ அதனை உரியமுறையில் எரித்து அழித்துவிடவேண்டும். பழந்துணியாகப் பயன்படுத்துவதோ குப்பைத்தொட்டியிற் போடுவதோ தேசத்திற்குச் செய்யப்படும் அவமானமாகும். எனவே அவ்வாறு செய்யக்கூடாது.

கொடியையேற்றும்போதும் கொடிவணக்கத்தின்போதும் செய்யப்படக்கூடாதவை.
--------------------------------------------------------------------------------

தேசியக்கொடிக்கு வழங்கப்படுகின்ற மதிப்பு, சிறப்பு என்பன அந்த நாட்டைச் சென்றடைவது போன்று, தேசியக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு, புறக்கணிப்பு என்பனவும் அதன் நாட்டையே சென்றடையும். எனவேதான் தேசியக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு பெருங்குற்றமாகக் கருதப்பட்டு அக்குற்றத்துக்கு மிகுதியான ஒறுப்பு (தண்டனை) வழங்கப்படுகின்றது.

தேசியக்கொடிக்கு மதிப்புச் செலுத்துகின்ற கொடிவணக்க நிகழ்வுக்கு நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சீரான ஒழுங்குமுறை வரையறுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகின்றது. கொடியேற்றம், கொடிவணக்கம் என்பனவற்றுக்கான ஒழுங்குமுறை, நடைமுறை நாட்டுக்கு நாடு வேறுபட்ட முறையில் அமைந்திருக்கும். அந்த வரையறுக்கப்பட்ட ஒழுங்கு முறைகளை மீறுவது தேசியக்கொடிக்கு இழைக்கப்படுகின்ற இழிவாகவே கொள்ளப்படும்.

தேசியக்கொடியைத் தலைகீழாகப் பறக்கவிடக்கூடாது.

மடித்தபடி மேலே ஏற்றி அங்கிருந்து விரிந்து பறக்கும் வகையில் தேசியக்கொடியை ஏற்றுதல் கூடாது. தேசியக்கொடியைக் கீழிருந்து பறந்தபடியிருக்கும் நிலையிலேயே ஏற்றவேண்டும்

கொடிமீது கொண்ட பற்று

---------------------------------------
சிறப்பு நிகழ்வுகளுக்கான ஊர்வலங்களின் போது தேசியக்கொடியை ஏந்திச்செல்வதும் ஏந்தி நிற்பதும் கூடத் தேசியக்கொடிக்குச் செலுத்துகின்ற மதிப்பு வணக்கமாகும். தேசியக்கொடி ஏந்துபவர்களும் கொடிக்கம்பத்தைக் காப்பவர்களும் தேசியக்கொடி சிதையவோ கொடிக்கம்பம் சரியவோ இடமளிக்கமாட்டார்.

தேசியக்கொடியை ஏந்துபவர் ஏந்துகின்ற கொடியைக் கடமை முடிந்ததும் உரிய இடத்தில் வைப்பர்; அல்லது தகுதியானவரிடம் கையளிப்பர்; எவ்விடர்வரினும் உயிரேபோகின்ற நிலைவரினும் கொடியைக் கைவிடாத தன்மையைக் கொண்டிருப்பர். தாம் ஏந்துகின்ற கொடி சரிந்தாலோ கீழே விழுந்தாலோ அது தமது நாட்டுக்கு இழுக்காகிவிடும்; தமது நாட்டின் ஆட்சி வீழ்ந்ததாகக் கொள்ளப்படும் என்ற உணர்வு அவர்களிடமிருக்கும். பண்டைக் காலத்திலேயே தமிழ்மக்கள் நாட்டின் கொடிமீது கொண்டிருந்த பற்றும் அதற்குக் கொடுத்த மதிப்பும் பற்றி இலக்கியங்களும் வரலாறுகளும் எடுத்தியம்புகின்றன.

தமிழீழத் தேசியக் கொடியின் வரலாறு

----------------------------------------------------------
எமது தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பெற்ற புலிக்கொடி 1977 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியாக இருந்துவருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பெற்ற கொடி தமிழீழத் தேசியக் கொடியாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் 1990 ஆம் ஆண்டு அறிவிக்கப்பெற்றது. தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூர்ந்த இரண்டாவது மாவீரர் நாளில் அதாவது 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் நாள் முதல் தடவையாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் அவரது பாசறையில் ஏற்றிவைக்கப்பெற்றது.

நிறங்களும் குறிக்கோளும்

----------------------------------------
எமது தேசியக்கொடியை மஞ்சள், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் அழகுபடுத்துகின்றன. தனிப்பாங்கான தேசிய இனமான தமிழீழத் தேசிய இனம் தனது சொந்த மண்ணில் தன்னாட்சி அமைத்துக்கொள்ள விழைவது அதனது அடிப்படை அரசியல் உரிமையும் மனித உரிமையுமாகும். தமிழீழ மக்கள் நடத்துகின்ற தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது, நியாயமானது என்பதையும் தமிழீழத்தேசம் எப்பொழுதும் அறத்தின் பக்கம் நிற்குமென்பதையும் மஞ்சள் நிறம் குறித்து நிற்கிறது.

தேசிய விடுதலை பெற்ற தமிழீழத் தனியரசை அமைத்துவிடுவதால் மட்டும் முழுமையான விடுதலையைப் பெற்றுவிட்டதாகக் கொள்ளமுடியாது. தமிழீழக் சமுதாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டும். சாதிய, வகுப்பு முரண்பாடுகள் அகற்றப்படவேண்டும். பெண்ணடிமைத்தனம் நீக்கப்படவேண்டும். இதற்குக் சமுதாய அமைப்பிற் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். சமன்மையும் சமதருமமும் சமுக நீதியும் நிலைநாட்டப்படவேண்டும். இத்தகைய புரட்சிகரமான சமுதாயமாற்றத்தை வேண்டிநிற்கும் எமது அரசியல் இலக்கைச் சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது.

விடுதலைப்பாதை கரடுமுரடானது; சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது. இவற்றைத் தாங்கிக் கொள்ளவும் விடுதலையடைந்தபின் ஏற்படப்போகும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தேசத்தைக்கட்டியெழுப்பவும் பாதுகாக்கவும் உருக்குப் போன்ற உறுதியான உள்ளம் வேண்டும்; அசையாத நம்பிக்கை வேண்டும்; தளராத உறுதி வேண்டும். இவற்றைக் கறுப்பு நிறம் குறித்துக் காட்டுகின்றது.

விடுதலை அமைப்பும் மக்களும் தலைவர்களும் தூய்மையையும் நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை வெள்ளை நிறம் குறித்து நிற்கிறது.

கொடியேற்றும் முறை
தேசியக்கொடியை ஏற்றும்போது கொடியேற்றப்படும் வளாகத்திலோ வீட்டிலோ இருக்கும் அனைவரும் (நோயாளர் நீங்கலாக) கொடியேற்றும் நிகழ்விற் பங்கேற்கவேண்டும். கொடிக்கம்பத்திற்கு இடது பக்கத்தில் நின்று கொடியையேற்றவேண்டும். கொடியை மிடுக்கோடும் சீரான வேகத்தோடும் ஏற்றவேண்டும். கூடுதலான வேகத்துடனோ மிக மெதுவாகவோ ஏற்றக்கூடாது. கொடியையேற்றுபவர் தானே கொடியையேற்றிக் கயிற்றைக் கொடிக்கம்பத்திற் கட்டவேண்டும். தேசியக்கொடியை ஏற்றும்போது கொடியை விரிப்பதற்கும் கொடி ஒழுங்காக இருக்கிறதா என்பதை உறுதிசெய்வதற்கும் கொடி நிலத்திற்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கும் கொடியை ஏற்றுபவருக்கு ஒருவர் உதவவேண்டும். கொடியையேற்றுபவர் கொடியை ஏற்றியதும் ஓர் அடி பின்னகர்ந்து வணக்க நிலையில் நிற்கவேண்டும். கொடிவணக்கப் பண் முடிவடையும் வரை அனைவரும் வணக்க (Salute) நிலையில் நிற்கவேண்டும்.

கொடியின்பார்வை

----------------------------
கொடியிலுள்ள புலியின்பார்வை கொடிக் கம்பத்திற்கு எதிர்ப்புறமாக இருத்தல் வேண்டும்.

தேசியக் கொடியை ஏற்றும் நேரமும் ஒளிபாய்ச்சுதலும்

கொடிக்கம்பத்தில் ஏற்றப்படும் தேசியக்கொடி நாள்தோறும் கதிரவன் எழுந்ததற்குப் பின்னர் ஏற்றப்பட்டு மறைவதற்கு முன்னர் இறக்கப்படவேண்டும்.

மங்கிய ஒளியிற் கொடியை ஏற்றுதல் கூடாது. எனவே காலை 6 மணிக்கு முன்பும் மாலை 6 மணிக்குப் பின்பும் கொடியை ஏற்றவேண்டுமெனிற் கொடிப் பீடத்திலிருந்து கொடிக்கம்பத்தின் உச்சிவரை போதுமான ஒளிபாய்ச்சப்படவேண்டும். கொடியேற்ற நிகழ்வு நடைபெறும் இடத்திலும் போதுமான வெளிச்சம் இருக்கவேண்டும்.

தேசியக்கொடியை முழுமையான வெளிச்சத்தின்கீழ் இருபத்துநான்கு மணிநேரமும் பறக்கவிடலாம்.

தேசியக்கொடி பொதுவாக மாலை 6 மணிக்கு முன்னர் முறைப்படி இறக்கப்படவேண்டும். கொடியேற்றித் தொடக்கப்படும் நிகழ்ச்சிகள் மாலை 6 மணிக்குப் பின்னரும் தொடருமாயின் நிகழ்ச்சி முடிவுறும் வரை கொடிக்கு வெளிச்சம் பாய்ச்சப்படவேண்டும். இரவில் நிகழ்ச்சி முடிவுற்றதும் கொடியை அமைதியான முறையில் இறக்கலாம்.

கொடியேற்றித் தொடக்கப்படும் நிகழ்ச்சிகள் நாட்கணக்கில் தொடருமாயின் அந்த நிகழ்ச்சிகள் முடிவுறும்வரை தேசியக்கொடி இரவும் தொடர்ச்சியாகப் பறக்கவிடப்படலாம். ஆனால் கொடிபறப்பது தெளிவாகத் தெரியக்கூடியவாறு போதிய வெளிச்சம் பாய்ச்சப்படவேண்டும். நிகழ்ச்சிகள் முடிவடைந்தபின் முறைப்படி தேசியக்கொடி இறக்கப்படவேண்டும்

எமது தேசியக்கொடியுடன் வேறு நாடுகளின் தேசியக்கொடிகள்
-----------------------------------------------------------------------------------------------
தமிழீழத் தேசியக்கொடியுடன் வேறு நாடுகளின் தேசியக்கொடிகளைப் பறக்கவிடும்போது ஒரே அளவான கொடிக்கம்பங்களில் கொடிகளை ஏற்றவேண்டும். தமிழீழத் தேசியக்கொடியின் இடப்புறமாக ஏனைய நாடுகளின் தேசியக்கொடிகளை அந்தந்த நாடுகளின் அகரவரிசைப்படி பறக்கவிடவேண்டும். எமது தேசியக்கொடியும் ஏனைய தேசியக் கொடிகளும் இடைஞ்சலின்றிப் பறக்கக்கூடியவகையிலும் (ஒன்றில் ஒன்று முட்டாமல்) சமனான இடைவெளியிலும் கொடிக்கம்பங்கள் நடப்படவேண்டும். எமது தேசியக்கொடியை ஏற்றியபின்பே ஏனையவற்றை ஏற்றவேண்டும். ஏனையவற்றை இறக்கியபின்பே எமது கொடியை இறக்கவேண்டும்

தேசியக்கொடியை இறக்குதல்

--------------------------------------------
தேசியக்கொடி ஏற்றப்படுவதுபோன்றே இறக்கப்படுவதும் ஒழுங்குமுறையிலான சிறப்பு நிகழ்வாகவே இருக்கவேண்டும். கொடியை இறக்குபவரும் முதன்iயானவராக, தகுதியானவராக இருத்தல் வேண்டும். கொடியேற்றுபவர் நிகழ்ச்சியின் இறுதிவரை இருந்தால் அவரே கொடியை இறக்குதல் வேண்டும்.

தேசியக்கொடி இறக்கப்படும்போது நிலத்தில் விழாது கைக்கு எட்டக்கூடிய உயரத்தில் வைத்தே கைகளில் ஏந்தி எடுத்தல்வேண்டும்.

தேசியக்கொடி இறக்கப்படும் நிகழ்வின்போது எவரும் கையொலி எழுப்பக்கூடாது. அந்நிகழ்வு அமைதியாக நடைபெறவேண்டும்.

கொடி வணக்க நிகழ்வை ஒழுங்குசெய்பவர்களுக்கு

-----------------------------------------------------------------------------

தேசியக்கொடியை ஏற்றுகின்ற நிகழ்வின்போது தவறுகள், தடங்கல்கள் ஏற்படாது இருப்பதற்கு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முற்கூட்டியே தேசியக்கொடியைக் கம்பத்தில் ஏற்றி ஒத்திகை பார்த்தல் வேண்டும்.

தேசியக்கொடி தலைகீழாக அல்லாமல் நேராக இருக்கின்றதா?

தேசியக்கொடியிற் கயிறு கோர்ப்பதற்கான மடிப்பு புலியின் பார்வைக்கு எதிர்ப்புறமாகத் தைக்கப் பட்டிருக்கின்றதா?

கொடி கிழியாமல், மங்காமல் ஏற்றக்கூடிய நிலையில் இருக்கின்றதா?

நிகழ்வில் எற்றப்பட இருக்கும் வேறுநாடுகளின் தேசியக்கொடி தவிர்ந்த ஏனைய கொடிகள் தேசியக்கொடியைவிடச் சிறிதாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதா?

கொடியை ஏற்றுவதற்கான கயிறு கொடிக்கம்பத்தின் உயரத்தைவிட இருமடங்கிற்குக் குறையாமலும் உறுதியாகவும் இருக்கின்றதா?

தேசியக்கொடி ஏற்றப்படும் கொடிக்கம்பம் உறுதியாக நாட்டப்பட்டிருக்கின்றதா?

கொடிக்கம்பம் தேசியக்கொடி ஏற்றுவதற்கு வேண்டிய உயரத்தை, உறுதியை உடையதாக இருக்கின்றதா?

என்பவற்றையெல்லாம் முற்கூட்டியே உறுதிசெய்து கொண்டால் கொடியேற்ற நிகழ்வில் எவ்வகைத் தவறோ தடங்கலோ ஏற்படாது தவிர்க்கலாம்.

தேசியக்கொடியேற்ற நிகழ்வில் ஏற்படும் தவறுகள், தடங்கல்களுக்கு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்யும் பொறுப்பாளரே பொறுப்பாவார்.

தேசியக்கொடியை அகற்றுதல்

--------------------------------------------

நீண்டகாலப் பயன்பாட்டின்போது நரைத்தல், இற்றுப்போதல் போன்றவற்றாற் பழுதடைந்து தேசத்தின் சின்னமாகப் பயன்படுத்த முடியாத நிலைக்குவரும் தேசியக்கொடிகளை அகற்றிவிடவேண்டும். வகுக்கப்பட்ட முறைக்கிணங்க அகற்றும் நிகழ்வு நடைபெறும்.

பயன்படுத்தமுடியாத கொடிகளைச் சேர்த்தல்

பழுதடைந்த கொடிகளை வட்டார அரசியற் செயலகங்களினூடாக ஆறுமாதத்திற்கொரு முறை சேர்க்கவேண்டும். சேர்க்கப்பட்ட கொடிகள் முழுவதும் தலைமைச் செயலகத்தில் ஒப்படைக்கப்படவேண்டும்.

பழுதடைந்த கொடிகளை ஆய்வு செய்தல்

தலைமைச் செயலகச் செயலரோ அவரால் அமர்த்தப்பெறும் தகுதிவாய்ந்த ஒருவரோ குழுவோ சேர்க்கப்பட்ட கொடிகள் அனைத்தையும் அவை எதிர்காலத்திற் பயன்படுத்த முடியாதபடி பழுதடைந்துள்ளனவா என்பதை ஆராய்ந்து உறுதிப்படுத்தவேண்டும். பயன்படுத்தமுடியாதவையென உறுதிப்படுத்தப்பட்ட கொடிகளுக்கு இறுதிச் சடங்கும் அகற்றுஞ் சடங்கும் ஒதுக்குப்புறமான வௌ;வேறு இடங்களில் மாலைநேரத்தில் இருள் சூழ்வதற்கு முன் நடைபெறவேண்டும்.

இறுதிச் சடங்கு

-----------------------

அகற்றப்படவிருக்கும் எல்லாக் கொடிகளையும் நிகராண்மைப்படுத்தும் ஒரு கொடியைத் தெரிவுசெய்து இந்நிகழ்விற் பயன்படுத்தவேண்டும். தற்போது பயன்படுத்தப்படும் கொடிக்காக ஒருவரும் நிலையாக ஓய்வு கொடுக்கப்படவிருக்கும் கொடிக்காக மற்றொருவருமாக செங்காவலர் (சிவப்புநிறப் பரேத் தொப்பி அணிந்திருக்கவேண்டும்) இருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். மொத்தமாக எழுவருக்குக் குறையாதோர் இந்நிகழ்விற் கலந்துகொள்ளவேண்டும்.

பகல் முழுவதும் பறந்துகொண்டிருக்கும் கொடிக்குப் பொதுவான சடங்கு முறைகளுக்கிணங்கப் பொழுது கருகுவதற்குமுன் ஓய்வு கொடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட செங்காவலரில் ஒருவர் இப்பணியைச் செய்வார்.

இறுதிமதிப்புப் பெறவிருக்கும் கொடியைக் கையாள்;வதற்காகத் தெரிவுசெய்யப்பெற்ற செங்காவலர் முன்னுக்குச் சென்று நடுவே நிற்பார். இறுதிமதிப்புச் செலுத்தப்பெற்று அகற்றப்படுவதற்காகத் தெரிவுசெய்யப்பெற்ற கொடியைத் தலைவர் செங்காலவரிடம் கையளிப்பார். பின்னர் கொடியை ஏற்றுமாறு கட்டளையிடுவார். வழமையாகக் கடைப்பிடிக்கப்படும் சடங்குகளுடன் கொடியேற்றப்பட்டுக் கொடிக்கம்பத்தின் உச்சியைக் கொடி அடைந்ததும் தலைவர் பின்வருமாறு உரையாற்றுவார்:-

இந்தக்; கொடி எமது தாயகத்திற்காக நீண்டகாலம் நன்கு பணியாற்றியுள்ளது. எதிர்காலத்தில் எமது தேசத்தை நிகராண்மைப்படுத்த முடியாத அளவுக்குப் பழுதடைந்துவிட்டது. பணியிலிருந்து முழுமையான ஓய்வு கொடுப்பதற்காக இன்று தெரிவுசெய்யப்பட்டிருக்கும் எல்லாக் கொடிகளையும் இக்கொடி நிகராண்மைப்படுத்துகிறது. இக்கொடியை வணங்குவதன் மூலம் எல்லாக் கொடிகளுக்கும் மதிப்பளிக்கிறோம்”

உரையின்பின் தலைவர், உறுப்பினர் அனைவரையும் கவனநிலைக்கு (யுவவநவெழைn) அழைப்பார்; வணக்கஞ் (ளுயடரவந) செய்யும்படி பணிப்பார்; உறுதிமொழியை முன்மொழிவார். கொடிக்கு ஓய்வளிக்குமாறு கட்டளையிடுவார். செங்காவலர் மெதுவாகவும் சடங்கு முறைகளுக்கமைவாகவும் கொடியை இறக்குவார். பின்னர் உரிய மதிப்புடன் வழக்கம்போல முக்கோணமாக மடித்துத் தலைவரிடம் வழங்குவார். குழு கலைக்கப்படுவதுடன் இறுதிமதிப்புச் சடங்கு முடிவுறும்.

எரியூட்டும் சடங்கு

----------------------------

ஒதுக்குப்புறமான வேறோரிடத்தில் எரியூட்டுஞ் சடங்கு நடைபெறும். கொடிகளை எச்சமெதுவுமின்றி முழுமையாக எரிக்கக்கூடிய வகையில் தீ மூட்டப்படும். முக்கோணமாக மடிக்கப்பட்டிருக்குங் கொடி, சடங்கு தொடங்குமுன் ஈமப்பேழையின் சாயலையுடைய செவ்வகமாக மடிக்கப்படும். எல்லோரும் நெருப்பைச் சூழ்ந்து நிற்பர். தலைவர் எல்லாரையும் கவனநிலைக்கு (யுவவநவெழைn) அழைப்பார். செங்காவலர் முன்னே வந்து கொடியைத் தீயிலிடுவார். எல்லோரும் விரைந்து வணக்கஞ் (ளுயடரவந) செலுத்துவர். வணக்கஞ் செலுத்தியபின் அனைவரும் கவனநிலைக்கு வருவர். தேசியப்பண் இசைத்தல், உறுதிமொழி உரைத்தல், கொடியின் மேன்மையை உரைத்தல் போன்றவற்றைத் தலைவர் நிகழ்த்துவார்.

கொடி எரிந்ததும் குழுத்தலைவரையும் செங்காவலரையுந் தவிர ஏனையோர் கலைந்து ஒரே வரிசையில் அமைதியாகச் செல்வர். தலைவரும் செங்காவலரும் அங்கேயே நின்று கொடி முற்றுமுழுதாக எரிந்துவிட்டதென்பதை உறுதி செய்வர். ஏனைய கொடிகளையுந் தீயிலிடுவர். எல்லாக் கொடிகளும் முழுமையாக எரிந்தபின் நெருப்பு அணைக்கப்படும். சாம்பர் முழுவதும் கவனமாகப் புதைக்கப்படுவதுடன் நிகழ்ச்சி முடிவடையும்.



தொடர்பு விபரம்

மின்னஞ்சல்:
அலுவலகம்:
Tamileelam