Thursday, September 17, 2009

போராட்டத்தின் இன்றைய வடிவமே நாடு கடந்த அரசாங்கம்''-பகுதி 2

சென்னை: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாக எழும் பல்வேறு கேள்விகளுக்கு பதில் தரும் வகையில் 15 கேள்வி- பதில்கள் அடங்கிய விளக்க அறிக்கையை விடுதலைப் புலிகள் அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன் இரண்டாம் பாகம் இது.

5. நாடு கடந்த அரசு அமைக்கும் முயற்சியைப் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர் ஏன் முன்னெடுக்க வேண்டும்?. அவர்களுக்குத் தமிழீழ அரசியல் விடுதலையில் உள்ள பங்கு யாது?
.

இன்றைய சூழலில் புலம்பெயர் தமிழர் மட்டுமே தமிழீழத் தமிழரது அரசியல் வேட்கைகளை முன்னெடுத்துச் செல்லும் நிலையில் இருக்கின்றனர். இது ஈழத் தமிழருக்கு வலுச்சேர்க்கின்ற காரணியகவே உள்ளது. 21ம் நூற்றாண்டின் அரசியல் உண்மைநிலை நாடுகடந்த அரசியலாகவே உருமலர்ச்சி பெற்று வருகிறது.

புலம்பெயர்ந்து அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்து வருகின்ற அயர்லாந்து மக்கள் வடஅயர்லாந்து மக்கள் போராட்டத்திற்கு உறுதியானதும் வெளிப்படையானதுமான ஆதரவை வழங்கினர். புலம்பெயர்ந்து வாழ்கின்ற யூத மக்கள் இந்நாள் வரை இஸ்ரேல் நாட்டை அரசியல் மட்டத்திலும் பொருளியல் அடிப்படையிலும் வலுப்படுத்தி வருகின்றனர். இன்னுமொரு தளத்தில் இத்தாலி, எல் சல்வடோர், எரித்திரியா, குரோசியா, மோல்டோவா முதலிய நாடுகள் புலம்பெயர்ந்து வாழும் மக்களைத் தமது சொந்த நாட்டு அரசியலின் தவிர்க்கமுடியாக உறுப்பாக ஏற்றுள்ளன.

இத்தாலிய நாடாளுமன்றத்திற்கு புலம்பெயர்ந்த இத்தாலிய மக்கள் நான்கு உறுப்பினரைத் தெரிவு செய்கின்றனர். புலம்பெயர்ந்து வாழும் கெயிட்டி மக்களுக்காக கெயிட்டியில் ஒரு தனித் தேர்தல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் பாதிக்கு மேலானவை இரட்டைக் குடியுரிமையை ஏற்றுக் கொண்டுள்ளன. இவை அனைத்தும் புதிய நூற்றாண்டில் நாடு கடந்த அரசியலுக்குக் கிடைத்துள்ள முதன்மைக்குச் சான்று பகர்கின்றன. இப்பின்னணியில்தான் ஈழத்தமிழர்களின் நாடுகடந்த அரசுக்கான முயற்சியையும் நோக்க வேண்டும்.

தொடர்ச்சியாகத் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதம் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் வெளிநாடுகளுக்கு ஏதிலிகளாகப் புலம் பெயர்ந்து குடியேறினர். இன்னொரு பகுதி மக்கள் வடகிழக்குக்கு வெளியே இடம் பெயரக் கட்டாயப்படுத்தப் பட்டனர். எஞ்சியோர் போரினால் சிதைக்கப்பட்டு உள்ளுரில் பொருளியலில் திக்கற்றவர்களாகவும் அரசியல் அடிமைகளாகவும் சிறைக் கைதிகளாகவும் மாற்றப்பட்டனர்.

எனவே தாயகத்தில் ஈழத் தமிழர் தமது தன்னாட்சி உரிமையை வென்றெடுப்பதற்கான பேராட்டங்களை முன்னெடுப்பது புலம்பெயர் தமிழரது உரிமையும் கடமையுமாகும்.

6. நாடு கடந்த தமிழீழ அரசு எங்கே அமையும்?.அதன் தன்மை எவ்வாறு இருக்கும்? அதன் முதன்மையான பணிகள் யாவை?

அமைக்கப்படவிருக்கும் தமிழீழ அரசுக்கு ஏனைய முறைசார் அரசுகள் போல் ஒரு நாட்டின் நிலப்பரப்பினைத் தளமாகக் கொண்டதாகவோ அல்லது சட்டம் இயற்றுதல், பாதுகாப்பு, வரி அறவிடல் போன்ற முறைமையான அரசுச் செயற்பாடுகள் மூலம் தனது இறையாண்மையை நிலைநாட்டவோ தேவை ஏற்படாது.

தாயகத்தில் வாழும் மக்களது பாதுகாப்பு, விரிவுபடுத்தப்பட்டதும் விரைவுபடுத்தப்பட்டதுமான முழுமையான தன்னாட்சி உரிமைக்கான போராட்டம், சமூக பொருண்மிய, பண்பாட்டுச் செழுமை ஆகியவற்றைத் தனது முதன்மைக் குறிக்கோள்களாகக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசு செயற்படும். மேலும், புலம்பெயர் ஈழத் தமிழர் தாங்கள் வாழும் நாடுகளின் சட்டங்களுக்கு இசைவாகப் தம்மைப் வலுவுள்ள ஒரு சமூகமாகக் கட்டியெழுப்புவதற்கும் அதனூடாக அவர்களால் அடையக்கூடிய சமூக, பொருண்மிய, அரசியல் மேல் நிலையினைத் தாயக விடுதலைக்கான உந்து சக்தியாக மாற்றும் உயரிய செயற்பாட்டினையும் இவ்வரசு முன்னெடுக்கும்.

நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியினைத் தனது ஆள்புலமாக கொண்டிருக்காவிடினும் தனது குறிக்கோள்களை அடைய செயலணிகளையும் அதற்கான செயற்பாட்டு அலுவலகங்களையும் உலகளாவிய மட்டத்தில் பல்வேறு நாடுகளில் அவற்றின் சட்டவரம்புகளுக்கு அமைய உருவாக்கிச் செயற்படுத்தும்.

7. நாடு கடந்த தமிழீழ அரசுக்கு அனைத்துலக நாடுகள் ஒப்புதல் அளிக்குமா?. அவற்றின் ஒப்புதலின்றி அதன் திட்டங்களைச் சிறப்பாக முன்னெடுக்க முடியுமா?

முன்னரே குறிப்பிட்டது போல் நாடுகடந்த தமிழீழ அரசு என்பது ஒரு புதிய முயற்சியாகும். இத்தகைய முயற்சிக்கான மாதிரிகள் இதுவரை உருவாக்கப்படவில்லை. கடந்த காலத்தில் அரசியல் விடுதலைக்காக போராடிய பல சமூகங்கள் தங்களது நாட்டுக்கு வெளியே புகலிட அரசுகளை உருவாக்கிச் செயற்பட்டன.

புகலிட அரசுகள் இயங்குவதற்கு வலுவான புலம்பெயர் சமூகம் தேவையாக இருக்காது. ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசைப் பொறுத்தவரை அதற்கு மிகவும் வலுவான புலம்பெயர் சமூகமும் தெளிவான அரசியல் இலக்குகளும் உண்டு. அதேவேளை ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு ஈழத் தமிழரது அரசியல் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கான தேவையை வலியுறுத்தும் அனைத்துலக நாடுகளினதும் தோழமைச் சக்திகளினதும் தொடர்ச்சியான வற்புறுத்தல் எமக்கு மிகச் சாதகமான காரணிகளாக உள்ளன.

8. நாடு கடந்த தமிழீழ அரசு பற்றிய எண்ணக்கருவை தமிழீழ விடுதலைப் புலிகளது அதைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளர் திரு. செல்வராசா பத்மநாதன் அவர்களே முதலில் முன்வைத்தார். அப்படியாயின் இதனைத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் திட்டமாகக் கொள்ள முடியுமா?.

ஈழத் தமிழர் தன்னாட்சி உரிமைக்கான போராட்டம் கடந்த பல பத்தாண்டுகளாகப் பல்வேறு கட்டங்களையும் அணுகுமுறை மாற்றங்களையும் தாண்டி வந்துள்ளது. இக் காலகட்டத்தில் அரசியல் கோரிக்கைகளின் வடிவங்கள் மேலும் துல்லியமானதும் தீர்க்கமானதுமான நிலைக்கு முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளன. அதேபோன்று போராட்ட முறைகளும் அதற்கான தலைமைகளும் மாற்றம் பெற்றன.

வரலாற்றின் இயங்கியல் தன்மையானது ஈழத் தமிழர் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் காணப்பட்டதனையே இது வெளிப்படுத்துகின்றது. அதன் தொடர்ச்சியாகவே இன்றைய நிலைமையையும் நோக்க வேண்டியுள்ளது.

2000ம் ஆண்டுகளின் பிற் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருமைப்படுத்தப்பட்ட தலைமையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் ஸ்ரீலங்காவினதும் அதன் நட்பு நாடுகளினதும் கூர்மைப்படுத்தப்பட்ட ராணுவ மேலாண்மையால் வலுவிழக்கச் செய்யப்பட்டது. இங்கு வலுவிழக்கச் செய்யப்பட்டது ஒரு குறிப்பிட்ட போராட்ட வடிவமே தவிர விடுதலைப் போராட்டமல்ல. ‘செப்டம்பர் 11’ எனக் குறிப்பிடப்படும் துன்பியல் நிகழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்கா முன்னெடுத்த ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற கருத்தியலை ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர் போரின்பொழுது கடைப்பிடிக்க வேண்டிய மனிதாபினமான சட்டங்களுக்கும் மனித நாகரீகங்களுக்கும் முற்றிலும் புறம்பாக ஒரு போரைத் ஈழத் தமிழர் மீதும் அவர்கள் தாயகத்தின் மீதும் திணித்து 21ம் நூற்றாண்டின் பெருங்கேடான இனப் படுகொலையை நடத்தி முடித்துள்ளனர்.

இச்சூழ்நிலையில் ஈழத் தமிழரது தாயக விடுதலைக்கான போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான வரலாற்றுக் கடமை தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இம்முதன்மையான பங்களிப்பை உரிய காலகட்டத்தில் உரியமுறையில் செல்வராசா பத்மநாதன் அவர்கள் முன்மொழிந்தார்.

இன்றைய சூழலில் புதிய உலக அரசியல் ஒழுங்கைக் கவனத்தில் எடுத்து அனைத்துலக நாடுகளின் புவிசார் அரசியல் வலைப்பின்னல்களுக்கு ஊடாக பொருத்தமான புதிய அணுகுமுறைகளைப் பயன்படுத்தி ஈழத்தமிழரது தாயக விடுதலைக்கும் தன்னாட்சி உரிமைக்குமான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான கருத்தினை விடுதலைப் புலிகள் முன்மொழிந்து அதனைப் புலம்பெயர் தமிழர்களிடம் கையளித்ததன் மூலம் தமது வரலாற்றுக் கடமையைச் செய்துள்ளனர். அதனைப் புரிந்துகொண்டு ஈழத் தமிழர் அனைவரையும் ஒன்றிணைக்கும் அமைப்பாக நாடு கடந்த தமிழீழ அரசு செயற்படும். இது மேலிருந்து திணிக்கப்படும் அரசாக இருக்காது. முற்றாகக் கீழிருந்து மேல்நோக்கி கட்டியெழுப்பப்படுகின்ற ஒரு மக்களாட்சி அரசாக இருக்கும்.

நாடு கடந்த தமிழீழ அரசு வெளிப்படைத்தன்மையும் பொறுப்புத்தன்மையும் கொண்டதாக வடிவமைக்கப்படும். வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புத்தன்மையை ஊக்குவித்து மக்களுக்கு அரசின் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை ஒளிவுமறைவின்றி வழங்கும். மக்களாட்சி செயல்முறையூடாகப் புலம்பெயர் தமிழரால் தெரிவு செய்யப்படும் பேராளர்களால் இது ஆளப்படும். இவ்வரசு செயற்படவுள்ள முறைமை தொடர்பான கூடுதல் விளக்கங்களை நாம் விரைவில் அறியத் தருவோம்.

(தொடரும்..)